24.5.12

கொப்பளிக்கும் காமத்தின் நிறம் அந்தி.

ஊஞ்சலாடி உலவி உள்ளமெங்கும்
பூச் சூடும்  ஒளிர்மஞ்சள் மையலில்
தகித்து மோகித்து உயிர் கொல்லும்
செக்கச் சிவக்கும் செந்தூர மோகத்தில்
கரு மேக மழையாகத் தேன் பொழிந்து
செவ்விதழ்கள் முத்தமிட்டு முயங்க
விரல் கோத்து தழல் நீலம் மெய்யணைத்து
பெருங்களிப்பில் சுழன்றாடித் தழுவ
பொல்லா ஆசை புயலாக உருவெடுத்து
வெண் சுடராய் கண்களிலே மிளிர
ஊனுருக்கும் பசலை பொன்னிறமாய் 
கொப்பளிக்க அந்தி நிறத்தில் பேரண்ட
வெளியெங்கும் சிதறியது காமம்.

24.2.12

பெருங்காட்டுப் பெருமழை.

சிறு செடியாட தரு மகிழ்ந்தாட
ஓடை எழுந்தாட அருவி குதித்தாட  
இளஞ் சூரல் தவழ்ந்தாட
இசை வேரல் அசைந்தாட
துள்ளி மானாட கரடி கூத்தாட
பிளிறிப் பிடியாட களிறு சேர்ந்தாட
உறுமிப் புலியாட ஊளையிட்டு நரியாட
கீரிக் கிளர்ந்தாட சட்டையுரித்துப் பாம்பாட
தாவிக் குரங்காட சிறுத்தை சிலிர்த்தாட
இடி மறைந்தாட மின்னல் நெளிந்தாட
வனமெங்கும் மேகம் சுழன்றாட
குளிர் காற்றின் இடையணைத்து
ஆடிப் பெய்தது பெருங்காட்டுப் பெருமழை.

13.2.12

ஏழிலைப் பாலைப் பூக்களாய்.

முதுவேனில் காலம்

எற்பாடும் மாலையும் முத்தமிட்டுக் கொண்டிருந்தது
காற்றைப் போல அலைந்து கொண்டிருந்தது மனம்
நெடுநேரமாய் மரத்தினடியில் காத்துக் கொண்டிருந்தான்
அற்றை நாள் அம்மரம் பூத்திருக்கவில்லை.

பின்பனிக் காலம் 

கடுங் குளிர் யாமத்தைத் தழுவிக் கிடந்தது
அம்மரம் மிகுந்த வாசனையோடு பூத்திருந்தது  
அவளோடு பேசிக் கொண்டே இருந்தது காற்று
ஏழிலைப் பண்கள் இசை மறந்து அசைந்தன

உதிர்ந்து கிடக்கின்றன காற்றின் சொற்கள்
ஏழிலைப் பாலைப் பூக்களாய்.

இளவேனில் வரும்.

6.1.12

மேகக் கலனூறிய தீஞ்சுவை மழைக் கள்.

திக்கின் பயணத்தில்
ஒரு பாகையில்
அவ்வற்புதம் நிகழுமெனச்
சொல்லப்பட்டிருந்தது.


மஞ்சிமம் யாதையும் முத்தமிட
தும்புரு யாழை  மீட்டியபடி
நடக்கத் தொடங்கியது
சரற் காலக் காற்று.


அந்தி வண்ணத்தில்
கூதலாடை
போர்த்தியிருந்தது
மாயப் பெரு வெளி.


பூ முத்திரைகள் காட்டி
நடனமாடின 
நறுங்கமழ் பச்சை மரங்கள்.


நீளும் தடமெங்கும்
குறு குறு இளஞ்செடிகள்
தோளணைத்துக் 
கதைத்துக் கொண்டிருந்தன.


மோக மிஞிறுகள் 
வனத்து மலர்களோடு
கழகண்டு மொழி
பேசித் திரிந்தன.


தளும்பித் தளும்பித்
திரண்ட குளத்தில்
காமத்தில் புரண்டன
நீரலைகள்.


மெல்லிதழ் மேலாடை
களைந்து
கிறங்கிக் கிடந்தது
செம்முளறி.


மேகக் கலனூறிய 
தீஞ்சுவை மழைக்கள்
நுரைத்துப் பொங்க


குளிர்ந்தினித்த அப்போதில்
அவ்வற்புதம்
நிகழ்ந்தது.


-பி.கு.சரவணன்.
 நன்றி : பூவரசி அரையாண்டிதழ்.

30.10.11

"முகில் பூக்கள்" குறித்து தோழி தீபாவின் விமர்சனம்.

"பைட் பைப்பர் ஹார்மோனிகா வாசித்துக் கொண்டு செல்வது போல் அலாதியான அனுபவமாக இருக்கிறது" -  தீபலக்ஷ்மி 
 http://deepaneha.blogspot.com/
விமர்சனத்தைப் படிக்க கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கவும் 

17.10.11

மெல்லப் பூத்து என் விழி மலர்த்தும் வேலிப் பூக்கள்.

வெளிச்சம்
தீட்டிக் கொண்டிருந்த
அந்திச் சித்திரத்தைப்
பார்த்தபடி
முற்றத்தில் அமர்ந்திருந்தேன்.

கோழியும் குஞ்சுகளும்
தம் நகச் சீப்பு கொண்டு
நிலத்தின் தலை வாரிக்
கொண்டிருந்தன.

பொன் மஞ்சள்
பூக்களைக்
கொய்து வந்தது
இளந்தென்றல்.

வெளியெங்கும் பறந்து திரிந்து
பசும் பாகற் கொடி படர்ந்த
பனையோலை வேலியில்
அழகாய் அமர்ந்தன        
தேன் சிட்டுக் குருவிகள்.

மகிழ்ந்து கத்தி
ஞாலம் மறந்து
கோலம் கொஞ்சிப்
பல கதைகள் பேசி
மூக்குரசி மூக்குரசி
முத்தம் கொடுத்தன.

வெட்கம் மேவிய மென் பாகல் இலைகள்
பனை ஓலை நெஞ்சில் முகம் பதிக்க
ஏகாந்தப் பொழுதின் இனிமை கூட்ட
காற்றில் பாடத் தொடங்கின
வேலிப் பனை ஓலைகள்.

களி மிகுந்த இரவாகிப் போனது அன்று.

மறுநாள்
வேலி அணைந்திருந்த
வேரல் கழியேறி
எல் புலரக்
கூவியது 
பொன்னிறச் சேவல்.

வெளிச்சம் மலரும்
வைகறை வானத்தில்
ஒளியள்ளி முகங் கழுவி
காற்றுத் துண்டால் துடைத்தபடி
வாசலில் நின்றிருந்தேன்.

அக்கணத்தில்
பூ மொட்டுக்களின் காதில்
பாகற் கொடியின்
பச்சை இலைக் கலாபங்கள்
தவழும் சிறகசைத்துச்
சத்தமின்றிச் சொன்னது,
"புற்றிழந்த அரவமொன்று
அலைந்து ஊர்ந்து
தன் கொடி மடியில்
களைத்துப் படுத்திருப்பதாக"!

நல் அரவத்தின்
ஆழ் உறக்கம்
கலைக்காது 
மெல்லப்
பூக்கத் தொடங்கின
என்
விழி மலர்த்தும்
வேலிப் பூக்கள்.

16.9.11

காடெங்கும் ததும்புகிறது காமம்.

பச்சை வனத்தில் மோகம்
மெய் சூட
கலந்து கிடந்தது
மண்ணும் விதையும்.

மென்தளிர்
இலையாடைகள்
மெல்ல நழுவ
பெரு மரத்திடம்
காதலுடன்
பேசிக் கொண்டிருந்தது
காட்டுக் கொடி.

சலனக் குளத்தில்
நீர்ப் பூக்களின்
அதர மகரந்தங்களை
முத்தமிட்டுக் கொண்டிருந்தது
பொன் தும்பி.

விரல்கள்  கோர்த்தபடி
நீல வான மெத்தையில்
கூடல் மொழி பேசி
மௌனித்திருந்த 
குளிர் காற்றும் மழை மேகமும்
சட்டெனத்  தழுவிக் கொள்ள
பொழிந்த பேரன்பில்
மஞ்ஞைப் பீலிகள் உதிர்ந்த
காடெங்கும் ததும்புகிறது
காமம்.