6.1.12

மேகக் கலனூறிய தீஞ்சுவை மழைக் கள்.

திக்கின் பயணத்தில்
ஒரு பாகையில்
அவ்வற்புதம் நிகழுமெனச்
சொல்லப்பட்டிருந்தது.


மஞ்சிமம் யாதையும் முத்தமிட
தும்புரு யாழை  மீட்டியபடி
நடக்கத் தொடங்கியது
சரற் காலக் காற்று.


அந்தி வண்ணத்தில்
கூதலாடை
போர்த்தியிருந்தது
மாயப் பெரு வெளி.


பூ முத்திரைகள் காட்டி
நடனமாடின 
நறுங்கமழ் பச்சை மரங்கள்.


நீளும் தடமெங்கும்
குறு குறு இளஞ்செடிகள்
தோளணைத்துக் 
கதைத்துக் கொண்டிருந்தன.


மோக மிஞிறுகள் 
வனத்து மலர்களோடு
கழகண்டு மொழி
பேசித் திரிந்தன.


தளும்பித் தளும்பித்
திரண்ட குளத்தில்
காமத்தில் புரண்டன
நீரலைகள்.


மெல்லிதழ் மேலாடை
களைந்து
கிறங்கிக் கிடந்தது
செம்முளறி.


மேகக் கலனூறிய 
தீஞ்சுவை மழைக்கள்
நுரைத்துப் பொங்க


குளிர்ந்தினித்த அப்போதில்
அவ்வற்புதம்
நிகழ்ந்தது.


-பி.கு.சரவணன்.
 நன்றி : பூவரசி அரையாண்டிதழ்.

1 comment:

சென்னை பித்தன் said...

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.