3.6.16

வெயிலில் பூக்கும் ஆதி முத்தத்தையொத்த கானல் முத்தங்கள்.

உலகின் ஆதி முத்தத்தை  
அவனும் அவளும் 
நிலத்தின் பேராழத்தில்
பல அடுக்குகளினூடாக
பாயும்  பெருநதியில்
மலராக்கி மிதக்க விட்டிருந்தனர்.

ஆதி முத்தம்
செவ்வரியோடும்
ஒரு மஞ்சள் மலர்.
அம் முத்த மலரின்
மென் மடலிதழ்களில் 
ஆயிரம் சூரியன்களின்
வெளிச்சம் எப்பொழுதும்
பரவிப் படர்ந்திருக்கும்.

அடர் வண்ண
அதன் மகரந்தமணிகளில்
கொப்பளித்துக் கொண்டே
இருக்கும் மோகத் தேன்
வழிந்து கால நதியில்
பெரும் மாயச் சுழல்களை  
தோற்றுவித்துக்
கொண்டேயிருக்கும்.

சுழலீர்ப்பில்
பெருமழைக் காலத்து
மேகங்கள் தம் கூடுடைத்து 
மழைப் பட்டாம் பூச்சிகளாய்
நிலம் புகுந்து பேராழம் பறந்து
மிதக்கும் ஆதி முத்தத்தில்
தேனுறுஞ்ச நில அதிர்வுகளை
உண்டாக்கி நதி மேலலையும்.

அக்கணங்களில்
பால் வீதிகளிலும்
பேரண்ட  வெளிகளிலும்
மஞ்சள் பூவின் தழல் வெப்பம்
மகிழ் காமத்தைப் போல
மிளிர்ந்து தகித்து கடுங் கோடையை
உண்டாக்கி எரிய விட்டிருக்கும். 

எரியுங் கோடையில்
எழும் கானல் நதியில்
அவனும் அவளும்
புனலாடிக் களியிலாழ   
வெயிலில் பூக்கும்
ஆதி முத்தத்தையொத்த
கானல் முத்தங்கள்.

- சரவணன். 

No comments: