3.6.16

காமனை எழிற் தேவனை தொழுவோமையா!

மாசிப் பிறை சூடி 
நின்றானை 
மோகச் சிறையேக 
வந்தானையா!
கறுத்த வேள் 
வந்தானையா!
செங்கரும்பு 
வில்லொடு 
வந்தானையா! 
ஐந்து மலர்க் 
கணைகளோடு 
வந்தானையா! 
காமன் 
ரதிமாரன் 
வந்தானையா! 
விரிந்த தாமரை 
கணை கொண்டு 
ஏறுதோள் அழகன்  
திருமார்பில் 
களி வேட்கை 
சுரக்கச் செய்து 
சுந்தரன் மதி 
சுழன்றாடச் 
செய்தானையா! 
குழகன் 
கொவ்வையிதழ் 
நோக்கி 
கொத்தாய் 
கொய்த அசோகம் 
கணை பூட்டி   
வசந்தன் 
நின்றானையா!
வல்லானை 
தன் வசமிழக்கச் 
செய்தானையா!
கூர் முல்லைப் பூ 
தொடுத்து மகரன், 
ஏகன் எழிலன் 
கண் நோக்கி 
நின்றானையா!
பித்தனைப் 
பித்தேறச் 
செய்தானையா!  
வண்டு மொய்க்கும்
மாம்பூ கணை பூட்டி 
விரிசடை ஒளியன் 
நுதல் விழி தாக்க 
பூவாளி கொண்டு 
தீவாளி
தெறித்தானையா!
காமர் மன்னன் 
காதல்
விதைத்தானையா!
உன்மத்தமாகி நின்ற  
சித்தர் தலைவனை 
மதனன்
சித்தஞ் சிதறச் 
செய்தானையா! 
நீலோற்பவம் 
எய்து முன்னர் 
நீலகண்டன்
விழித்துக் 
கொண்டானையா!
சமரில் காமனைத் 
தகனம் செய்தானையா!
எரித்தும் உருவிலியாய் 
சீவன் செழிக்கச் 
செய்வானையா!  
என்றும் நீலத் தழல் 
பூத்த நெருப்பிலவன்
தெரிவானையா!
காமனை வெல்லல் 
கடவுளுக்கும்
எளிதில்லையையா !
கரங் கூப்பி 
காமனை 
எழிற் தேவனை 
தொழுவோமையா! 

-சரவணன்.

No comments: