பச்சை வனத்தில் மோகம்
மெய் சூட
கலந்து கிடந்தது
மண்ணும் விதையும்.
மென்தளிர்
இலையாடைகள்
மெல்ல நழுவ
பெரு மரத்திடம்
காதலுடன்
பேசிக் கொண்டிருந்தது
காட்டுக் கொடி.
சலனக் குளத்தில்
நீர்ப் பூக்களின்
அதர மகரந்தங்களை
முத்தமிட்டுக் கொண்டிருந்தது
பொன் தும்பி.
விரல்கள் கோர்த்தபடி
நீல வான மெத்தையில்
கூடல் மொழி பேசி
மௌனித்திருந்த
குளிர் காற்றும் மழை மேகமும்
சட்டெனத் தழுவிக் கொள்ள
பொழிந்த பேரன்பில்
மஞ்ஞைப் பீலிகள் உதிர்ந்த
காடெங்கும் ததும்புகிறது
காமம்.
3 comments:
இயற்கையை நன்றாக கவனித்து வர்ணிக்கிறீர்கள்!
OH MY GOD!
காமத்தில் திளைக்கிறோம் படிக்கும்போது..
Post a Comment