20.11.08

காதலைப் போல...

பால் வெளியில்
ஒரு வானமும் ஒரு நிலமும்
காதலிக்கத் தொடங்கின...

ஒன்றை ஒன்று
பார்த்துக் கொண்டே இருந்தன...

பெருகிய காதலில்
வானம் வண்ணம் கொண்டது...
நிலமோ பூத்துக் குலுங்கியது...

காலம் இப்படியாக
சென்ற ஒரு வெளியில்
பெரு ஊழியின் சூழ்ச்சியில்
பிரிந்தனர் காதலர்...

பசலை பெருக்கி
நிறம் தொலைத்து
நெடு நாட்கள்
தவித்தது நிலம்..

வண்ணம் தொலைத்து
வாடி நின்றது
வானம்...

பிரிவின் துயரம்
பெரு நோயாய்
வருத்த
நிறம் இழந்த வானம்
நீராய்
நிலம் புகுந்தது...

நீண்ட பிரிவின்
சந்திப்பில்
அணைத்துக் கொண்டனர்
காதலர் இருவரும்...

காதற் பெருக்கில்
நிறம் கொண்டன
நிலமும்...வானமும்...

எங்கும் வண்ணங்கள்...

அழகாய் மாறிப் போனது
இவ்வுலகம்...

அங்கு
அவனும் அவளும்
பார்த்துக் கொண்டனர்...

வானமும் நிலமும்
இன்னும் இருக்கிறது...
வண்ணமாய் இருக்கிறது...
அழகாய் இருக்கிறது...

அவர்களும் காதலிக்கத் தொடங்கி விட்டார்கள்...

அழகின் வசத்தில்
அவனும் அவளும்...
வானமும் நிலமும்...


கள்ள மழையோ
தனக்குள் சிரித்துக் கொண்டது...

மழை...

அன்றும் நீராய்...
இன்றும் நீராய்...
என்றும் நீராய்...

காதலைப் போல...




0 comments: